Wednesday, March 18, 2009

கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்




















Thursday January 15, 2009
நினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு
By கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம்

இன்று நினைவு வெளியீடுகள் மிகக் காத்திரமான ஆவணங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேகாந்தம் அடைந்த ஒருவரின் நினைவுகளை காலத்தால் நி;ன்று நிலைக்க வைக்கும் முயற்சிகளாக இவை அமைகின்றன. வெறுமனே தேகவியோகப் பாடல்களை (கல்வெட்டுப் பாடல்) ஆக்கிய நிலை மாறி இன்று பொதுஅறிவு வினாவிடைகள் விஞ்ஞான விளக்கங்கள் தேர்ந்த கட்டுரைத் தொகுப்புக்கள் என்பவற்றையும் கடந்து இலக்கியங்களின் மீள் பதி;ப்புக்களாகவும், தேர்ந்து எடுத்த கவிதை, மற்றும் சிறுகதைத் தொகுப்புக்களாகவும் வெளிவந்து தனிக் கவனிப்புப் பெறுகின்றன.
இந்தவகையில் திரு சு. குணேஸ்வரன் எடுத்துவரும் முயற்சிகள் தனிக்கவனம் பெறத்தக்கன. புலம்பெயர் நாட்டுச் சிறுகதை எழுத்தாளர்களின் தேர்ந்த கதைகள் ஒன்றினை ‘வெளிநாட்டுக் கதைகள்’ என்ற பெயரில் தொகுத்து நினைவு வெளியீடாகத் தந்தார். ‘அம்மா’ என்ற மகுடத்தின் கீழ் தாய்மை தொடர்பாய் படைக்கப்பட்ட தேர்ந்த கவிதைகளின் தொகுப்பை வெளியிட்டு வைத்தார். இவ்வாறு அவர் ஆற்றிவரும் தொகுப்பு முயற்சிகளில் ஒன்றுதான் ‘கிராமத்து வாசம்’ என்ற குழந்தைப் பாடல்களின் தொகுப்பு.
13.12.2008 இல் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு மயிலன் சின்னத்தம்பி என்பவரின் 31 ஆம் நினைவாக வெளியிடப்பட்ட ‘கிராமத்து வாசம்’, க. வேந்தனார் தொடக்கம் மு. பொன்னம்பலம் வரை 16 கவிஞர்கள் யாத்த 21 குழந்தைப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. 26 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் யாவற்றிலும் கிராமத்து மண்ணினதும் கிராமத்து வாழ்வினதும் வாசனை கமழ்கின்றது. இதற்கு மகுடம் வைத்தாற்போல விரும்பி ரசிக்கத்தக்கதான ஓவியர் வாசனின் வழிகாட்டலில் மூன்றாவது கண் குழுவினரால் உருவாக்கப்பட்ட ‘வெருளி’ (வெருட்டிகளில் இருந்து விரும்பி) ஒன்று அட்டைப்படமாக வந்துள்ளமை சிறப்பாகவே அமைந்துள்ளது.
அனைத்துக் குழந்தைப் பாடல்களும் ஏற்கனவே அச்சு ஊடகங்களில் வெளிவந்தவையே. எனினும் அவை இங்கு தொகுத்து வைக்கப்பட்ட விதம் சிறப்பானது. கு. வேந்தனாரின் ‘அம்மாவின் அன்பு , சாரணா கய்யூமின் ‘சாப்பிடவா’, ச.வே பஞ்சாட்சரத்தின் ‘அம்மா அப்பா பாவம்’, குறமகளின் ‘தாத்தா’, கனக செந்திநாதனின் ‘பாட்டி அழுகின்றாள்’, என்று குடும்ப உறவுகளின் அன்பைப் பாடித் தொடங்குகின்றது.
தொடர்ந்து பிற உயிர்கள் மீது வெளிப்பட வேண்டிய அன்பைப் பாடும் வகையில் ந. கிருஸ்ணராசாவின் ‘கோழிக்குஞ்சு’, க. சச்சிதானந்தனின் ‘பட்டணம் போன பூனை ஆடலிறையின் ‘பச்சைக் கிளி’, மனோ பற்குணத்தின் ‘பட்டாம் பூச்சி’, க. வீரகத்தியின் ‘பலூன்’, வேலுவின் ‘பட்டம்’, திமிலைத்துமிலனின் ‘தவளைக்கூத்து’, சேந்தனின் ‘ஆமையின் வீடு’, என நீண்டு செல்கின்றது. ஆங்காங்கே தொழிலின் மகத்துவம் உணவின் உன்னதம் கலையின் அவசியம், ஒற்றுமை, வாழ்வின் உயர்வு என்று பல்வேறு செய்திகள் பாடப்பட்டுள்ளன.
குழந்தைகளைக் கவரக்கூடிய எளிய சந்தம், ஓசை நயம் என்பவற்றோடு ஒவ்வொரு பாடல்களுக்கும் பொருந்தத்தக்க வகையிலான படங்களும் இணைந்துள்ளன.
குழந்தைப் பாடல்களில் கூட சமூக விமர்சனங்கள் வெளிப்படலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஈழத்து நாட்டார் பாடல்களான ஏண்டி குட்டி, சிங்கிலி நோனா ஆகிய பாடல்கள் விளங்குகின்றன. ஆடலிறையின் ‘கடலை வாங்குவோம்’ என்ற பாடல் மிக அற்புதமாக கச்சான் வறுக்கும் காட்சியை மனதில் புதைக்கின்றது அதற்கு மேலாக
‘கோயிலுக்கு வந்திடாத
தம்பி தங்கை தின்றிடக்
கொண்டல் கச்சான் சோளம் எல்லாம்
வாங்கிக் கொண்டு செல்லுவோம்’
என்று பகுத்துண்டு ஓங்கும் வாழ்வு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
க. சச்சிதானந்தனின் ‘புக்கு புக்கு’ என்ற புகைவண்டிக் கவிதை கூறும் கருத்து வித்தியாசமானது. வழமையாக புகைவண்டி பற்றி கவிஞர்கள் பாடிய கருத்துக்களில் இருந்து வித்தியாசமானது. தண்டவாளத்தில் புகைவண்டி பயணிப்பதைப் பாடும்போது
‘இட்ட நேர்மை
இரும்புப் பாதை
விட்டிறங்கா
மேன்மையாளன்’
என்று பாடுவது மனிதனுக்கு ஒழுக்கம் போதிக்கும் வகையில் என்பது குறிப்பிடத்தக்கது.
க. சச்சிதானந்தனின் ‘பட்டணம் போன பூனை’ என்ற பாடலில் கிராமிய நகர வேறுபாடுகளை கவிஞர் சித்தரிக்கும் விதம் சிறப்பானது.
‘சட்டியிலே மீனில்லை
சாத்தி வைப்பார் குளிரூட்டும்
பெட்டியிலே பிறகென்ன
பிடிக்கவில்லை பட்டணம்தான்
அரணாகக் கோட்டைகளாம்
அதற்குள்ளே விசிறிகளாம்
பரணொன்றும் கிடைக்கவில்லை
பாழ்பட்ட பட்டணத்தில்’
என்ற வரிகள் கிராமத்து உயிர்ப்பூட்டும் வாசனையை எமக்கு அள்ளித்தரும் வரிகளாக பரிணமிக்கின்றன.
மேலும் இத்தொகுப்பில் சோமசுந்தரப் புலவரின் ‘கத்தரி வெருளி’, மு. பொன்னம்பலத்தின் ‘தில்லைநடனம், ஒன்றுபட்டால்’ ஆகிய பாடல்களும் க. சச்சிதானந்தனின் ‘எலியும் முயலும் செய்த தோட்டம்’ ஆகிய பாடல்களும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.
குழந்தைகளின் உலகம் தனித்துவம் வாய்ந்தது. குழந்தைகளின் உள்ளத்துப் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆழமாக அவர்களின் ஆளுகையில் பதிவாகும். அவர்களின் புரிதல்கள் கனவுகளோடு சங்கமித்து யதார்த்தமாய் நீட்சி பெற்று வாழ்வை விளங்க வைக்கும.; இதனால் பாடல்கள் வழி குழந்தையின் புரிதல்களை வடிவமைக்கும் கவிஞர்கள் காத்திரமான பணியாளர்கள்தான். எனினும், அவர்களின் பாடல்களை அவற்றின் பயன் நோக்குக்கருதி திரு சு. குணேஸ்வரன் தொகுத்து வைத்துள்ள விதம் சிறப்பு வாய்ந்ததாகும்.
சிறந்த கவிஞராக, விமர்சகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக தம்மை அடையாளப்படுத்தியுள்ள குணேஸ்வரன் அவர்கள் நினைவுமலர்த் தொகுப்பு முயற்சிகளிலும் அசைக்கமுடியாத முத்திரை பதித்தவர் என்பதை இதுவரை அவர் தொகுத்த பயனுள்ள தொகுப்புக்கள் உணர்த்துகின்றன. இந்தக் ‘கிராமத்து வாசம்’ என்ற குழந்தைப் பாடல்களின் தொகுப்பு காலத்தால் நின்று நிலைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
---



Copyright:thinnai.com

1 comment:

  1. துவாரகனின் கவிதைகள் அதிகம் வாசித்ததில்லை. விமர்சனத்தில் மேற்கோள்காட்டப்படிருந்த குதித்தோடும் மனசு கவிதை பார்த்து வியந்துபோனேன். இயற்கையும் வாழ்வும் பற்றிய ஒரு சங்கப் புலவனின் கண்ணோட்டமும் கவனிப்பும் எனக்கு பிடித்திருந்தது. நிறைய சங்கக் கவிதைகலை வாசியுங்கள். இயற்க்கை வாழ்வின் குறியீடாகும். நல்வாழ்த்துக்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்

    ReplyDelete