Thursday, August 28, 2014

உள்ளும் வெளியும் - நூல் மதிப்பீடு

ந. சத்தியபாலன்

நன்றி : கலைமுகம் 58

Friday, May 23, 2014

உள்ளும் வெளியும் - ஆய்வின் பரவசம்



- இராகவன்


ஆய்வெழுத்தின் வரையறை மற்றும் வடிவு ஒழுங்கினைக் குலைத்து தேடலைத் தூண்டும் முனைப்புடன் வெளிவந்திருப்பதுதான் “உள்ளும் வெளியும்” கொண்டிருக்கும் தனித்துவமாகிறது. புலம்பெயர் இலக்கியம் குறித்தான உரையாடலில் தவிர்த்துவிடமுடியாமல் நமக்குமுன் தோன்றுவது குணேஸ்வரனின் விம்பம்தான். அந்தளவிற்கு தாடனம் வந்துவிட்டது அவருக்கு. எந்த வகைப்பாட்டிலும் அவரால் தேய்ந்தெழுதமுடிகிறது. எனது வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவதானால் அவர் தன்னையோர் ஆய்வாளனாக முன்னிலைப்படுத்தாமல் வாசகனாகவே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி வருகிறார். உள்ளும் வெளியும் பிரதியில் நேர்ந்திருப்பதுமிதுதான். உள்ளடக்க ரீதியில் வகைப்படுத்தினால் நான்கு உள்ளும் ஐந்து வெளியுமாக ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் இரு கட்டுரைகள் ஆய்வு நோக்கற்றவை. எவ்வாறாயினும் எல்லாக் கட்டுரைகளுமே பொதுநிலைப்பட்ட வாசிப்புக்கேற்றதாகவே எழுதப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பக்கத்திலும் குணேஸ்வரனின் மெய்யான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உணர முடிகிறது. ஓவ்வொரு கட்டுரையையும் ஓர் ஆய்வாக மட்டும் அணுகாமல் தனது வாசிப்பனுபவத்தில் கிளர்ந்த பரவசத்தையும் திளைப்பையும் வாசகனிடத்தில் தொற்றவைத்துவிடும் முனைப்புடனும் அணுகுகிறார். ஓர் எளிமையானதும் நுட்பமானதுமான புனைவுத் தன்மை கொண்ட மொழியைக் கையாள்கிறார். இம்மொழியானது வாசகனை முழு ஈடுபாட்டுடன் அணுகச் செய்வதில் பெரும்பாங்காற்றுகிறது என்பதுடன் புதிய தளங்களுக்கும் இட்டுச் செல்கிறது.

இங்கே முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் ஒரு பார்வை - இதுவரை வெறும் மேலோட்டமான தகவலாகத் தெரிந்திருந்த மண்மனம் என்ற நாவல் பற்றிய இக்கட்டுரையும் உள்ளடக்கமாக வரும் நாவலின் பக்க எடுத்துக்காட்டுக்களும் முக்கியமானவை. இன்றைக்கு நவீன புலம்பெயர் இலக்கிய வெளியில் அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி, கலாமோகன், பார்த்தீபன், சக்கரவர்த்தி போன்றோர் தவிர்க்கவியலாத முக்கியத்துவமுடையோராகிவிட்டனர். இவர்களையெல்லாம் ஈழத்தில் முறையாக அறிமுகம் செய்து வைத்து வாசிக்கத் தூண்டியவர்களுள் குணேஸ்வரனுக்கு முக்கிய பங்கிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதேபோல் அம்;மா, எக்ஸில், உயிர்நிழல், தூண்டில், கூர் எனப் பெரும்பாலான புலம்பெயர் சிற்றிதழ்களை எமக்குப் பரிச்சயப்படுத்தியவரும் இவர் என்பது கவனிப்புக்குரியது.

பொதுவாக வாசகனை இருவகைப்படுத்தலாம். ஓன்று தூண்டல் அவசியமற்ற வாசகன். இரண்டாவது தூண்டல் அவசியமான வாசகன். தூண்டல் அவசியமற்ற வாசகன் இயல்பாகவே எவரது தூண்டுதலுமின்றித் தேடலில் ஈடுபட்டு வாசிப்பவன். தூண்டல் அவசியமான வாசகன் எவராவது தூண்டிக் கொண்டிருந்தால் மட்டுமே தேடலில் ஈடுபட்டு வாசிப்பவன். இந்தவகை வாசகனைத் தூண்டுவதற்கு ஏதுவாயமைவதுதான் புனைவுசாராத ஆய்வு நிலைப்பட்ட பிரதியாகும். இந்த வகையில் குணேஸ்வரனின் உள்ளும் வெளியும் முக்கியத்துவம் பெறுமொன்றாகும்.

“ஈழத்து இலக்கியமும் இரசனையும் - நாவல்”, “அண்மைக்கால இலங்கைப் படைப்புக்களில் எஸ். ஏ உதயனின் நாவல்கள்” எனுமிரு கட்டுரைகளும் நன்கு பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆரம்பநிலை வாசகனுக்கு ஏற்றவிதத்தில் மிக எளிமையாக வரையப்பட்டுள்ளன. புனைவியல்பாங்கான மொழிப்பிரயோகத்திற்கான சாத்தியம் குறைவாக உள்ளபோதிலும் அதை இயன்றளவுக்குச் சாத்தியமாக்கியெழுதியுள்ளமை குணேஸ்வரனைப் பிற ஆய்வாளர்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபடுத்தித் தனித்துவமுடையவராக எடுத்துக்காட்டப் போதுமானது.
‘கூடாரநிழல்’ கவிதைத் தொகுதி குறித்தும் “உயிரின் வாசம் - பெயரிடப்படாத நட்சத்திரங்கள்” கவிதைத் தொகுதி குறித்தும் எழுதப்பட்டுள்ள இரு கட்டுரைகளும் ஆய்வெழுத்துக்களல்லவென்றபோதிலும் துயரம், வலி, வேதனையைக் கவியச்செய்யும் விதத்தில் உணர்வு தோய்ந்து எழுதப்பட்டுள்ளன.


அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி, ஆதவன் முதலானோரின் நாவல்ககளிலிருந்து உயிர்த்துடிப்பான பக்கங்களைத் தேர்வுசெய்து இணைத்துள்ள விதம் வெகு நேர்த்தியானதென்பதும் குறிப்பிடத்தக்கது.

“ஈழத்தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் தமிழ்க்கல்வி” செம்மையான எதிர்வுகூறலோடும் முறையான வகைப்பாட்டுடனும் நோக்கப்பட்டிருப்பது அதன் இயங்குதிசைக்கு வலுச்சேர்த்துள்ளது.

பொதுவில் ஆய்வெழுத்துக்கும் ஆரம்பநிலை வாசகனுக்குமிடையில் ஓர் இடைவெளியிருக்கும். உள்ளும் வெளியும் அந்த இடைவெளியை நீக்கியுள்ளது. இந்த நீக்கம் ஓர் ஆய்வாளனாக மட்டுமன்றி ஒரு படைப்பாளியாகவும் குணேஸ்வரன் அடைந்துள்ள வெற்றி என்றே சொல்லவேண்டும். இந்நூலின் உள்ளடக்கத்திற்கு ஒத்திசைவாக அமையும் கைலாசநாதனின் முகப்போவியமும் குறிப்பிடத்தக்கதொன்று.
நன்றி : சமகாலம், 2014 மே 16-31
---

Sunday, March 16, 2014

“உள்ளும் வெளியும்” நூல் வெளியீடு : பார்வையும் பதிவும்



- லெனின் மதிவானம்

கடந்த வாரம் கிளிநொச்சி சென்றிருந்தேன். கவிஞர் கருணாகரனைச் சந்திப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நண்பர் குணேஸ்வரனின் ‘உள்ளும் வெளியும்’ நூல் வெளியீட்டுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்நிகழ்வில் என்னையும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

இந்தச்செய்தி எனக்கு மகிழ்ச்சி தருவதாகவே இருந்தது. நண்பர் குணேஸ்வரனை 41 வது இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது சந்தித்தேன். அவரது கருத்துக்கள், சிந்தனைகள் மக்களை ஒட்டியதாக கிளைபரப்பியிருந்ததை அறிய முடிந்தது. இவ்வம்சம் இயல்பாகவே அவர்மீதும் அவரது எழுத்துக்கள் மீதுமான தொற்றை ஏற்படுத்தியிருந்தது. எனவே இவரது நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்தேன்.

அன்று காலை (02.03.2014) தோழர் கருணாகரன் சரியாக எட்டுமணிக்கு நண்பர் ஒருவரின் வாகனத்தில் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் எங்களது உரையாடல்கள் இயல்பாகவே 41 வது இலக்கியச் சந்திப்பு குறித்ததாகவே அமைந்திருந்தது. இச்சந்திப்பு ஏற்படுத்திய தாக்கம், எதிர்காலத்தில் செய்யக்கூடியவை, செய்ய வேண்டியவை குறித்தும் அதற்கான பொறிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினோம். இந்தக் கலந்துரையாடலின் காரணமாக கூட்ட மண்டபத்தை எப்படி அடைந்தோம் என்பது தெரியாதிருந்தது. கூட்டத்திற்கு 15 நிமிடத்திற்கு முன் அங்கு சென்றுவிட்டோம். இக்கூட்டம் யா/தேவரையாளி இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. மண்டப வாயிலை அடைந்தபோது சிரேஷ்ட எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன், அநாதரட்சகன், விமலன், தபேந்திரன் போன்றோரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. அதிலும் நீண்ட இடைவெளிக்குப்பின் திரு சி. வன்னியகுலம் அவர்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி தருவதாக இருந்தது. அவர் ரூபவாகினியில் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற காலங்களில் எனக்கும் அவருக்குமான உறவு மிக நெருக்கமாக இருந்தது. கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் குறித்து பல கருத்தாடல்கள் எம்மிடையே நடந்திருக்கின்றன. அந்த வகையில் அவரது சந்திப்பும் அன்பான அரவணைப்பும் நம்பிக்கை தருவதாக இருந்தது. இந்த சந்திப்புகளிடையே என் உள்ளமும் கண்களும் கூட்டத்தினரிடையே ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தது. அவர் எல்லோரும் மனமாரப் பாராட்டும் ஒரு மனிதராகவும் அதேவேளையில் தனது இலட்சியங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு சான்றாகவும் அமைந்த எழுத்தாளர் தெணியான் ஆவார். அவரது மனிதாபிமானம் போற்றத்தக்கது. இளம் எழுத்தாளர்கள்பால் மிகுந்த அன்பும் பரிவும் கொண்டு அவரது படைப்புக்களைப் படித்து அவர்கள் முன்னேற ஊக்கமும் ஆக்கமும் அளிப்பவர். அவரது இத்தகைய தன்னலமற்ற தொண்டின் விளைவாக இன்று பல அருமையான எழுத்தாளர்கள் உருவாகி வந்துள்ளனர். அந்த வரிசையில் என்னையும்கூட உள்ளடக்கிக் கொள்கிறேன். மிகக் குறுகிய நேரத்தில் அவரோடு ஏற்பட்ட உரையாடல் வாழ்வில் எதிர்ப்படும் சோதனைகளுக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற திராணியை எனக்களித்தது.

குறித்தநேரத்தில் நூல் வெளியீட்டு விழா தொடங்கியது. இந்நிகழ்வில் உரையாற்ற வந்திருந்த அ. சிறீகரன் தனது உரையில் :
குணேஸ்வரன் ஒரு பின்தங்கிய சமூகத்தின் கண்களைத் திறக்கும் கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது தன்னலமற்ற சேவையின் காரணமாக வன்னிப் பிரதேசத்தில் ஒரு புதிய தலைமுறை கல்வியில் முன்னேறி வந்துள்ளதை நான் அறிவேன் என அவரது கல்விப்பணி குறித்துக் குறிப்பிட்டார். இவர் ஒரு பிரதிக்கல்விப் பணிப்பாளர் என்பதற்கு அப்பால் மானுடத்தை நேசிக்கின்ற கல்வியியலாளராக மனிதனாக நிற்பதாகவே அவரது உரை அமைந்திருந்தது.

தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் :
இந்நூலாசிரியர் ஒரு படைப்பாளி, கவிஞர், பதிப்பாளர், விமர்சகர், அதற்கு அப்பால் சமூக செயற்பாட்டாளராக தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் இயங்கி வருகின்றவர். குறிப்பாக அண்மைக்கால இலக்கிய செல்நெறிகளில் ஒன்றான புலம்பெயர் இலக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றவர். அவரது பல்பரிமாணங்களின் வெளிப்பாடாகவே இந்நூல் அமைந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து வெளியீட்டுரை ஆற்றிய இ. இராஜேஸ்கண்ணன் குணேஸ்வரனின் ஆய்வுகளின் முக்கிய கூறாக திகழ்வது அவர் இலங்கையில் எழுந்த தமிழ்த்தேசியப் போராட்டத்தின் விளைவாக அது ஏற்படுத்திய புலம்பெயர்வு வாழ்க்கையையும் போர்க்காலச் சூழலில் எமது நாட்டில் வாழ்கின்ற தமிழர்களினுடைய வாழ்க்கை அம்சங்களைப் பிரதிபலிப்பதாக அவரது எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. மிக ஆழமான தேடுதலை மேற்கொண்டு வருகின்ற அவரது எழுத்துக்கள் அவர் கூற வருகின்ற விடயங்களை வாசகர்கள் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஆதவனின் மண்மனம் என்ற நாவல் குறித்த கட்டுரையைக் குறிப்பிடலாம். புலம்பெயர்வு வாழ்வு குறித்து எழுந்த இலக்கியங்களில் இந்நாவலுக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இன்று இந்நாவலைப் பெறமுடியாதுள்ளது. இவ்வாறானதோர் சூழலில் இந்நூலாசிரியரின் கட்டுரையை வாசிக்கின்றபோது ‘மண்மனம்’ என்ற நாவலை வாசித்த அனுபவமும் அது பற்றிய விமர்சனத்தை தரிசித்த அனுபவமும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றது. அந்த வகையில் நூலாசிரியரின் எழுத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

தொடர்ந்து மதிப்பீட்டுரை வழங்கிய கருணாகரன் இந்நூலை முன்னிறுத்தி இன்றைய பண்பாட்டுச் சூழலில் வாசிப்பு குறித்த ஒரு பார்வையை முன்வைத்தார். ஒரு வாசிகசாலையை இழந்த சமூகம் அதற்காக கண்ணீர் விட்டது. எமது பண்பாடுகள் அழிவுறுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்காகவும் கண்ணீர் விடப்பட்டது. இந்த உணர்வுகள் யாவும் உண்மையாக இருந்தால் நாங்கள் மானுடத்தை நேசிக்கின்ற உணர்வுகள் உண்மையானவையாக இருந்தால் இன்று நம் மத்தியில் வெளிவருகின்ற நல்ல நூல்களை வாசிக்கின்ற உணர்வுள்ளவர்களாகவும் நாங்கள் இருக்கவேண்டும். நமது சூழலின் வாசிப்பு என்பது பல வகையில் சிதைவுக்குள்ளாகி வருகின்றது. இவ்வாறான சூழலில் இத்தகைய நூல்கள் வெளிவருவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. இந்நூலின் முக்கியமான அம்சம் பேசாத பொருளைப் பேசத் துணிகின்றது. உதாரணத்திற்கு ஷோபாசக்தியின் படைப்புகள் புலம்பெயர் இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. இருப்பினும்கூட ஷோபாசக்தியை நடுநிலையாக நோக்குகின்ற ஆய்வுகள் நம் மத்தியில் உள்ளனவா? அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் அவ்வாறான படைப்புகள் குறித்து நூலாசிரியர் பேசத் துணிந்திருப்பது வரவேற்கத்தக்கது என்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.

இலங்கையில் இனமுரண்பாட்டினடியாகத் தோன்றிய குறுந்தமிழ்த் தேசியமும் பேரினவாதமும் சமூக முரண்பாடுகளையும் மோதல்களையும் அதிகரிக்கச் செய்துள்ளன. இந்தச் சூழலில் வாழ்வின் பன்முகத் தன்மையை முழுமையாக காரண காரிய தன்மையுடன் எடுத்துக் கூறக்கூடிய இலக்கியங்கள் வரவேண்டியுள்ளன. நடந்து முடிந்த தமிழ்த்தேசியப் போராட்டத்தில் தமிழ் பாசிசத்தின் பரிமாணத்தை பொதுமக்கள் அனுபவித்து உணர்ந்திருந்தபோதிலும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டங்கள் நேர்மையாக முன்னெடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மீண்டும் குறுந்தமிழ்த்தேசிய அரசியலுக்குள் முடங்குவதாக அமைந்திருக்கின்றது. இந்த சூழலில் தமிழ் தேசியத்தின் குறுகிய அரசியல் போக்குகளை விமர்சித்தால் தாங்கள் மக்களிலிருந்து அந்நியப்பட்டுப்போவோம் என்ற அச்சம் ஷோபாசக்தி முதலானோர் பற்றிய விமர்சனங்கள் ஆய்வுகள் மதிப்பீடுகள் தோன்றாததற்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. இந்த மௌனம் இந்நூலாசிரியரில் ஓரளவு கலைந்துள்ளது எனலாம்.

இவ்விடத்தில் இன்னுமொரு குறிப்பையும் கூறிவைத்தல் பொருத்தமானதாக இருக்கும். புலம்பெயர் இலக்கியம் என்ற சொல் சில காலங்களில் வழங்கி வந்திருப்பினும் மிகச் சமீப காலங்களில்தான் அது பரந்த பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் தமது ஆன்மாவைத் தொலைத்து வெறும் யந்திரமயமாக்கப்பட்ட வாழ்க்கைச் சூழலில் தமக்குக் கிடைக்கின்ற சிறிய ஓய்வுநேரங்களைக்கூட இந்திய சினிமாக்களில் தொலைத்து நின்றனர். இவ்வாறான சூழலிலும் அவர்கள் தமது கல்வியையும் உழைப்பையும் முன்னிறுத்தி தமக்கு அவசியமாக உழைப்புடன் (சில நேரங்களில் உபரி உழைப்பை இழந்தபடியே) முழுநிறைவான வாழ்வை இருப்பை கட்டமைப்பதற்கான சமூகச் செயற்பாடுகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். மறுபுறத்தில் தாம் இழந்து வந்த சொந்த பந்தங்களின் வாழ்வு குறித்தும் அவர்களின் சமூக மாற்ற போராட்டங்கள் குறித்தும் கணிசமான அளவு பங்களிப்பை இந்த புலம்பெயர் தமிழர்கள் வழங்கியுள்ளனர். இந்த உதவிகள் எந்தளவு இலங்கைவாழ் மக்களை வந்தடைந்தன என்பது முக்கியமான கேள்விதான். இந்த புலம்பெயர் வாழ்வு குறித்த இலக்கியம் வெறும் சொந்த மண் குறித்த புலம்பலாக மட்டுமன்றி புதிய பண்பாட்டுக்கான செயற்பாடுகளையும் முன்னிறுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. குணேஸ்வரனின் இந்த நூல் இத்தகைய செயற்பாடுகளுக்கான விவாதத்தையும் தொடக்கி வைக்கின்றது.

இந்நூலை ஒட்டுமொத்தமாக தொகுத்து நோக்குகின்றபோது இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் சமகால வளர்ச்சி செல்நெறியை இந்நூல் தொடமுனைந்துள்ளது. நமது இலக்கியச் சூழலில் இதுவரை பேசப்படாத இலக்கியங்கள் குறித்து பேசுகின்றது. மறுபுறத்தில் உருவத்தை மாத்திரம் பரிசீலிப்பதோடு நின்றுவிடாது உள்ளடக்கத்திலும் அது அக்கறை காட்டுகின்றது. வெளிப்படையாகக் கூறுவதாயின் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளில் உருவவாதச் சித்தாந்த நோக்கின் அழுத்தத்தைவிட யதார்த்த சித்தாந்தத்தின் அழுத்தம் அதிகம் என துணிந்து கூறலாம். நமது கலை இலக்கிய சூழலில் ஓயாத உழைப்பின் மீதும் அதன் உயிர்நாடியான சமூகத்தின்மீதும் நம்பிக்கை கொண்டு பொதுமக்களின் நலனிலிருந்து அன்னியமுறாத எழுத்துக்களைத் தருகின்றவர் குணேஸ்வரன் என்பதற்கு இந்நூல் ஆதாரமாக அமைந்திருக்கின்றது. அதற்காக இங்கு விவாதிக்கப்படும் விடயங்கள் யாவும் அப்படியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதல்ல. வாழ்வு குறித்த இந்நூலாசிரியரின் பார்வையிலும் கருத்திலும் தத்துவ சிந்தனையிலும் சிற்சில முரண்பாடுகள் உண்டு. எனினும் பொதுமக்களை நோக்கி ஒரு புதியதொரு சித்திரத்தை ஆக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இந்நூலில் உள்ளன. இதுகுறித்து காத்திரமான விமர்சனங்கள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும். பணிவுடனும் பண்புடனும் நமது குறைநிறைகளை விமர்சித்துக்கொள்ள வேண்டும். நமது யதார்த்த நிலைமைக்கு ஏற்ப எமது எதிர்காலவியலை உருவாக்குவதற்காகவேனும்.

நன்றி : தினக்குரல், 07 மார்ச் 2014 (கொழும்புப் பதிப்பு)
---

Wednesday, March 12, 2014

“உள்ளும் வெளியும்”உணர்த்தும் தேடல் – ஆழம் – வீச்சு – படர்ச்சி



பேராசிரியர் செ. யோகராசா

சமகால ஈழத்து நவீன தமிழ் ஆய்வுப் பின்புலத்திலே இந்நூலின் முக்கியத்துவம் குறித்துச் சிலவற்றை எடுத்துரைப்பதற்கு இவ் அணிந்துரையைப் பயன்படுத்துவதே பொருத்தமானது.

எண்பதுகள் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப் போக்கிலே முற்றிலும் புதிய போக்குகள் குறித்த காலமாகும். பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான வெளிப்பாடுகள் புகலிட அனுபவ வெளிப்பாடுகள் பெண்நிலைவாத நோக்கிலான அனுபவ வெளிப்பாடுகள் என்றவாறான புதிய போக்குகள் சார்ந்த படைப்புகள் வெளிவந்தளவிற்கு பல காரணங்களினால் அவை பற்றிய ஆய்வுகள் போதியளவு நடைபெறவில்லை. குறிப்பாக புகலிட இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள் பெருமளவு நிகழாமைக்கான காரணம் அவ்விலக்கியங்களைத் தேடிப்பெறுவதென்பது பகீரதப் பிரயத்தனமானதென்பதே. இவ்விடத்திலேதான் இந்நூலாசியரது ‘தேடல்’ அதன் ஆழம், அதன் வீச்சு, அதன் படர்ச்சி என்பது பாராட்டும்படியாக இருக்கிறது. புகலிட இலக்கியமென்றால் குணேஸ்வரன்தான் என்பது இந்நூலினூடாக மீண்டுமொருதடவை உறுதியாகின்றது.

‘புகலிட இலக்கியம்’ என்பது பற்றி இவ்வேளை ஒரு தெளிவை ஏற்படுத்தவேண்டியுள்ளது. புகலிட இலக்கியம் என்பது பரந்த நோக்கில் ஒன்றையே குறித்து நிற்பினும் ‘புகலிட எழுத்தாளர் இலக்கியம்’ என்ற வேறுபட்ட இன்னொன்றும் (அடிப்படையில் புகலிட இலக்கியம் என்பதனுள் அடங்கினாலும்) இருக்கின்றது. அதாவது ஈழத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் எழுதப்படுகின்றபோது ‘புகலிட இலக்கியம்’ என்பது ‘புகலிட எழுத்தாளரது இலக்கியம்’ என்பதாகிவிடுகின்றது. இதிலுள்ள நான்கு கட்டுரைகளும் அத்தகையனவே.

மேற்கூறியவற்றுள் ஒன்றான ஆதவன் எழுதிய ‘மண்மனம்’ நாவல் பற்றிய அறிமுக ஆய்வு மிகுந்த முக்கியத்துவமுடையது. உள்ளுர் இலக்கியங்களுக்கு இல்லாத சிக்கலொன்று புகலிட இலக்கியங்களுக்குள்ளது. தொடராக வெளிவந்து முற்றுப்பெறாத படைப்புகள் சில அங்குள்ளமையே அதுவாகும். இவ்விதத்தில் ஆதவனால் எழுதப்பட்ட (ஆதவனே மறந்துவிட்ட) ‘மண்மனம்’ இந்நூலாசிரியரது கடினமான தேடலினால் புத்துயிர் பெற்றுள்ளதென்பது மிகையானதன்று. போர் இலக்கிய வகைப்பாடுகளுள் ‘இயக்கங்களினது போராட்டச் செயற்பாடுகள்’ பற்றிய படைப்புகள் முக்கியமானவை. இவ்வாறு வெளிவந்த ஏனைய படைப்புக்களின் வரிசையில் ( ‘கடல் கடந்தோர்’ தொடக்கம் ‘ஆறாவடு’ வரை ) ‘மண்மனம்’ நாவலுக்கும் ஓரிடமுண்டு என்பது இவரது இவ் அறிமுக ஆய்வூடாகவே தெரியவருகிறது!

புகலிட எழுத்தாளருள் முதன்மையிடம் பெறுகின்ற மிகச் சில படைப்பாளிகளுள் ‘ஷோபாசக்தி’ யும் முக்கியமானவர். ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய நாவல்களுடான அவரது முக்கியத்துவத்தை இந்நூலிலுள்ள ‘ஷோபாசக்தியின் கொரில்லா, ம்’ என்ற அறிமுக ஆய்வு வெளிக்காட்டுகின்றது. போராட்டகால அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை வெளிப்படுத்தும் செ. யோகநாதன், செ. கணேசலிங்கன் முதலான மூத்த தலைமுறை எழுத்தாளருடன் ஒப்பிடுகின்றபோது கொரில்லா பெறுகின்ற முக்கியத்துவம் பெரிது. வெலிக்கடைப் படுகொலைகள் பற்றி விரிவாகப் பேசுகின்ற நாவல்கள் எதுவும் வராத சூழலில் ‘ம்’ நாவலின் தனித்துவம் பற்றி நூலாசிரியரது கட்டுரை செறிவான முறையில் எடுத்துரைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதன்மையிடம் பெறுகின்ற மற்றொரு புகலிட எழுத்தாளர் அ. முத்துலிங்கம். அவரது படைப்புப் பற்றிய ‘அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற கட்டுரை விமர்சனபூர்வமான ஆய்வாகின்றது. ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ அவ்வப்போது ‘தொடராக’ வெளிவந்தபோது அது பின்பு நாவல் ஆகும் என்று எவருமே கருதவில்லை. பத்தி எழுத்து என்றோ அனுபவக் கட்டுரை என்றோ இளமை நினைவுகளென்றோ கருதியவர்களே அதிகம். இந்நிலையில் உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல்தான் என்பதனைப் பலவகைச் சான்றுகள் ஊடாக நிறுவுகிறார் இவ்ஆய்வாளர்.

இவரது புகலிட எழுத்தாளரது படைப்புகள் சார்ந்த மற்றொரு விமர்சன ஆய்வான ‘புலம்பெயர்ந்தோரின் நாவல்களின் வடிவம்’ என்பது பொதுநோக்கிலானது. பின்நவீனத்துவச் செல்வாக்கிற்குட்பட்ட சில புகலிட எழுத்தாளரது படைப்புகளை இனங்காட்டுவது இவ்விதத்தில் புகலிட எழுத்தாளரது படைப்புகளின் சிறப்பாற்றல்களை வெளிப்படுத்தும் மிக முக்கியமான கட்டுரையாகின்றது இது.

‘உயிரின் வாசம் - பெயரிடாத நட்சத்திரங்கள்’ என்ற கட்டுரை இவ் ஆய்வாளர் தேர்ந்த நூற்படைப்புகளையே முக்கியமான படைப்புகளையே கவனத்திற்கு உட்படுத்துபவரென்பனைக் காட்டுகின்றது. ஏனெனில், இக்கூட்டுக்கவிதைத் தொகுப்பு, ‘போரிலக்கியம்’ என்ற விதத்திலும் ‘பெண்கள் இலக்கியம்’ என்ற வித்திலும் ‘புகலிட எழுத்தாளரது வெளியீடு’ என்ற விதத்திலும் (அது இவ்வகைத் தொகுப்பிற்கு இன்னொரு விதமான கனதியை அளிக்கின்றது என்பதும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது) பன்முகச் சிறப்புகள் கொண்டது. குறிப்பாக ‘சொல்லாத சேதிகள்’, ‘மறையாத மறுபாதி’ ஆகிய தொகுப்புகளின் வரிசையில் வைத்தெண்ணக்கூடியது. ஆக இத்தியாதி எண்ணங்கள் யாவும் இந்நூலாசிரியர் இத்தொகுப்பினை ஆய்விற்கெடுத்தமையின் நற்பேறுகளே என்பதில் தவறில்லை.

இந்நூலிலுள்ள ஏனைய ஆய்வுகள் ஈழத்தில் வசிக்கின்ற எழுத்தாளர் சிலரது படைப்புகள் பற்றியன. இவ்வகையில் அடங்கும் ஆய்வுகளில் ஒன்று ‘எஸ்.ஏ உதயனின் நாவல்கள்’ என்பது. ஈழத்தின் தமிழ்பேசும் வாழிடங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச அலகுகள் என்றோ உபபண்பாட்டு அலகுகள் என்றோ எவ்வாறு கணிக்கப்படினும் அவற்றுள் ஒன்றாகிய மன்னார் பிரதேசம் நவீன இலக்கிய வளர்ச்சியில் குறிப்பாக நாவல் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அண்மைக்காலத்திலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது. அவ்வாறெனில் அவ்வழி மன்னார் பிரதேச நாவல் இலக்கியத்தின் முன்னோடியாக உதயன் திகழ்வது ஏற்புடையதே என்பது அவரது நான்கு நாவல்களையும் ஆய்வாளர் கவனத்திற்குட்படுத்தியதன் ஊடாக புலப்படுகின்றது.

சற்று முற்பட்ட காலத்தில் எழுத ஆரம்பித்தாலும் 2009 ற்குப் பிற்பட்ட நவீன கவிதை வளர்ச்சியில் மிக முக்கிய இடம்பெறுபவர் தீபச்செல்வன். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ தொடக்கம் ‘கூடார நிழல்’ வரையான (இரு தலைப்புகளுமே ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை) அவரது கவிதைத் தொகுப்புகளே இதற்கு நற்சான்று பகர்கின்றன. இவ்விதத்தில் கூடார நிழலையும் ஆய்வு விமர்சனத்திற்குட்படுத்துகின்றமை பொருத்தமானதே.

‘ஈழத்து இலக்கியமும் இரசனையும் - நாவல்’ என்ற கட்டுரை ஈழத்து நவீன இலக்கியம் தொடர்பான பொதுவான நோக்குடையது. அதாவது ஈழத்து நாவல் இலக்கிய இரசனை பற்றி - இரசனை மாற்றங்கள் பற்றி - ஆராய முற்பட்டுள்ளது. ஈழத்து நாவல் வளர்ச்சிப் போக்குகளை காலந்தோறும் எற்பட்டுவந்த மாற்றங்களை பின்னணியாகக் கொண்டு வாசகரது இரசனை மாற்றங்களை அணுக முற்படும் முதன் முயற்சி என்றவிதத்தில் இலக்கிய ஆர்வலரது சிந்தனையைத் தொடர்ந்து கிளறக்கூடியதாகவுள்ளது.

சுருங்கக் கூறின் இந்நூலிலுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து நோக்குகின்றபோது சமகால ஈழத்து நவீன தமிழ் வளர்ச்சிப் போக்கின் தளர்ச்சி நிலையை இந்நூல் ஒரளவு மாற்றமுற்பட்டுள்ளது என்று துணிந்து குறிப்பிடலாம். ஏதோவிதத்தில் எண்பதுகளின் முக்கியமான மூன்று போக்குகள் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளையும் (எண்ணிக்கையில் ஏற்ற இறக்கமிருப்பினும்) இத்தொகுப்புக் கொண்டிருப்பது அதற்குச் சான்றாகிறது. அது மட்டுமன்று புகலிட எழுத்தாளரது நூல்களை மட்டுமன்றி ஈழத்தின் பலபிரதேசங்களிலிருந்தும் இன்று பெருமளவு வெளிவருகின்ற நூல்களைக்கூட வாசிக்கின்ற ஆரோக்கியமான சூழல் அருகிய நிலையில் இருவகை நூல்களும் சார்ந்து இந்நூலில் அடங்கியுள்ள நூல்களின் தேர்வுகளும் அவை பற்றிய அறிமுக ஆய்வுகளும் விமர்சன ஆய்வுகளும் இந்நூலிற்கு மேன்மேலும் சிறப்புச் செய்கின்றன என்பதையும் கூறவேண்டியுள்ளது. நூலாசிரியரை பன்மடங்கு பாராட்ட வேண்டியுள்ளது.

சமகால ஈழத்து ஆய்வுலகமும் புகலிட ஆய்வுலகமும் இவரிடமிருந்து எதிர்பார்ப்பன அதிகமாகும்.

(சு. குணேஸ்வரனின் "உள்ளும் வெளியும்" நூலுக்கு பேராசிரியர் செ. யோகராசா எழுதிய அணிந்துரை)
---